சனி, 14 ஆகஸ்ட், 2010

நோன்பின் ஒழுக்கங்கள்

ஐவேளைக் தொழுகைகளை அதனதன் நேரத்தில் ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.

வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும். மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.

நோன்பு நோற்று இருக்கும் நிலையிலும் நோன்பு திறந்த பிறகும் உள்ளத்தை அல்லாஹ்வின் மீது அச்சத்துடனும் ஆதரவுடனும் வைத்துக்கொள்ளவும். இந்நிலை வணக்கங்கள் அனைத்தின் இறுதியிலும் அமைந்திருக்க வேண்டும்.
உடலுறவு முதலிய பெருந்தொடக்கு நிலையில் இருப்பவர் நோன்பு நோற்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டால் உணவு உண்டுவிட்டு நோன்பு நோற்பதற்காக நிய்யத் (எண்ணம்) வைத்துக் கொள்ளலாம். பின்னர் குளித்துத் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.
மாதத்தீட்டு மற்றும் பிரசவத்தீட்டு இவற்றிலிருந்து அதிகாலைக்கு முன் துப்புரவாகி விட்ட பெண் அன்றைய நோன்பை நோற்பது கடமை.

நோன்பாளி தன் பல்லைப் பிடுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பிடுங்கிக் கொண்டு அதற்கு மருந்து வைத்துக் கொள்ளலாம். காதுகளிலும் கண்களிலும் சொட்டு மருந்திட்டுக் கொள்வதும் கூடும். சொட்டு மருந்தின் ருசியை தொண்டையில் உணர்ந்தாலும் சரி. நோன்பு முறியாது.

கடுமையான வெப்பநிலையில் சகிக்க முடியாத நோன்பாளி தன் உடலைக் குளிர் படுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம். ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் சுவாச நெருக்கடியை இலேசு படுத்தும் ஸ்ப்ரேயை நோன்பாளி தன் வாயில் செலுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

வாய் வரண்டு போய் சிரமமாக இருந்தால் நோன்பாளி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளலாம். அல்லது (புழபடiபெ செய்யாமல்) வாய் கொப்பளித்துக் கொள்ளலாம்.

ஸஹர் உணவை ஃபஜ்ருக்குச் சிறிது நேரத்திற்கு முன்பு வரைப் பிற்படுத்துவதும் சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறப்பதைத் துரிதப்படுத்துவதும் நபிவழி ஆகும்.

பழுத்த பேரீத்தம்பழம் அது கிடைக்காவிட்டால் சாதாரணப் பேரீத்தம்பழம் அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீர் அதுவும் கிடைக்காவிட்டால் கிடைக்கும் ஏதேனும் ஓர் உணவைக்கொண்டு நோன்பைத் திறக்கலாம். எதுவுமே கிடைக்காவிட்டால் உணவு கிடைக்கும் வரை உள்ளத்தில் நோன்பு திறந்ததாக எண்ணிக்கொள்ளவும்.

நோன்பாளி வணக்க வழிபாடுகளை அதிகமாக்கிக் கொள்வதும் தடுக்கப்பட்ட அனைத்தையும் விட்டு தவிர்த்துக்கொள்வதும் அவசியமாகும்.
பொய் பேசுதல் புறம்பேசுதல் ஏமாற்றுவது வட்டி கொடுக்கல் வாங்கல் செய்வது தடை செய்யப்பட்ட சொல் செயல் அனைத்தையும் விட்டு விலகியிருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பாவமான சொல்லையும் அதைக் கொண்டு செயல்படுவதையும் விட்டு விடவில்லையோ அவர் தன் உணவையும் குடிப்பையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக