செவ்வாய், 30 மார்ச், 2010

அளவோடு பேசு..

ஒரு குரு இருந்தார்.முற்றும் துறந்தவர்.எல்லாம் கற்றவர்.அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள்.கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள்.குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழை.கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.குரு வந்தபோது யாருமில்லை.பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால்அவருக்கு ஏமாற்றம்.அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான்.என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.

அவன் சொன்னான்,''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்.நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.புல்லு வைக்கப் போகும் போது ,எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க ,ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும் நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.''படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு,அவனுக்கு மட்டும் தன பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

தத்துவம்,மந்திரம்,பாவம்,புண்ணியம்,சொர்க்கம்,நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார்.பிரசங்கம் முடிந்ததும்,எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.

''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால்,அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன்.முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்,''என்றான் அவன்.

அவ்வளவு தான்!குரு அதிர்ந்து விட்டார்.

..மெயிலில் வந்தது..

சனி, 27 மார்ச், 2010

.:: பூமி தினம் ::.

உலகை அச்சுறுத்தி வரும் பருவநிலை சீர்கேட்டை குறைக்க விழிப்புணர்வு நடவடிக்கையாக உலகம் முழுவதும் நேற்று பூமி தினம் அனுசரிக்கப்பட்டது.

பூமி நேரத்தையொட்டி இந்தியா முழுவதும் நேற்று பல இடங்களில் ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து மக்கள் அதை அனுசரித்தனர்.

நாடு முழுவதும் பூமி நேரம் பரவலாக அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் பெரும்பாலானோர் வீடுகளில் விளக்குகளை அணைத்து அனுசரித்தனர்.

மொத்தம் 100 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 5 கோடி பேர் இதில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்த பூமி நேரம் அனுசரிப்பது தொடங்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது இது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. ஆண்டுதோறும் இது அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பூமி நேரத்தை புறக்கணித்த கிரிக்கெட் உலகினர்...

இந்தியாவின் 80 சதவீத அளவிலான மின்சாரம் நிலக்கரியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

உலக அளவில் புகை மாசுவை அதிக அளவில் வெளிப்படுத்தும் நாடுகளில் முன்னணியில் உள்ள ஒன்று இந்தியா. பசுமை இல்ல வாயுக்களை அதிக அளவில் நாமும் வெளியேற்றி வருகிறோம். இந்தியாவில் மின்சாரத்தின் மூலமான கார்பன் மாசுக்கள்தான் அதிக அளவில் வெளியேறுகின்றன. அதாவது பாதி புகை மாசு மின்சாரத்தால்தான் ஏற்படுகிறது.

பூமி நேரம் அனுசரித்துக் கொண்டிருந்தபோது பிரகாசமான விளக்கொளிக்கு மத்தியில் கிரிகெட் போட்டி சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.பூமி நேரத்தை விட போட்டி முக்கியம் என்று கருதிய ரசிகர்களும் அவர்கள் பூமி நேரத்தின்போது டிவிகளை அணைக்காமல் தொடர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

உலக அளவில் புகை மாசுவை அதிக அளவில் வெளிப்படுத்தும் நாடுகளில் முன்னணியில் நாம் அதை தடுப்பதற்கான முயற்சியிலும் முன்னணியில் இருந்திருக்க வேண்டும்...

பூமி நேரத்திற்காக ஒரு நாள் கிரிக்கட் விளையாட்டை தள்ளிவைத்தால் அதில் ஈடுபட்ட யாருக்கும் நஷ்டம் ஏற்படபோவதில்லை அப்படி இருக்க இந்த பூமி தினத்தை முன்னிட்டு கிரிக்கட் போட்டிகள் ஒருநாள் ரத்து என்ற அறிவிப்பை IPL கிரிகெட் வாரியம் அறிவிதிருந்தால் இதன் மூலம் இந்த நாள் பற்றிய விழிப்புணர்வு பரவலாக எல்லா மக்களிடமும் ஏற்பட்டு எல்லரோயும் இந்த பூமி தினத்தில் பங்கேற்க செய்திருக்கமுடியும்.

ஆனால் பணம் பண்ணுவது மட்டுமே எங்களது தலையாய கடமை என்பதாக உள்ள மோடிக்கள். உலகம் எப்படி போனால் எங்களுக்கு எண்ண என்ற எண்ணத்தில் நேற்று கிரிகெட் விளையாட்டை நடத்தியுள்ளது மிகவும் கவலைக்குரியது.

நேற்று பூமிதினம் பற்றிய செய்தியை எங்களது அறையில் உள்ள நண்பர்களிடம் கூற முழு ஒத்துழைப்பு கொடுத்து ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து ஒத்துழைத்த அணைத்து நண்பர்களுக்கும் மேலும் இந்த நல்ல நிகழ்ச்சியில் பங்கேற்று நேற்று விளக்கை அணைத்து பூமி தினம் அனுசரித்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண

இன்றைய கால கட்டத்தில் Divx, FLV, MP4, MKV போன்று பல வீடியோக்கள், புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன. தரவிறக்கி அவற்றை நீங்கள் பார்க்க முற்படும் போது Codec இல்லை என்ற பிழைச்சொல் வரும். சிலவற்றில் DVD வீடியோக்கள் ஓடாது.

விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது விண்டோஸ் மீடியா பிளேயர்.ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர் எல்லா வீடியோவையும் திறப்பது இல்லை. சில சமயம் வேலை செய்யும். பல நேரம் காலை வாரும். பெரிய தலைவலி பிடித்த வேலை இது.

இந்த இம்சையில் இருந்து விடுபட ஒரே வழி விண்டோஸ் மீடியா ப்ளேயரை உபயோகிப்பதை நிறுத்தி விடுங்கள். எல்லா வீடியோ கோப்புகளையும் தடை இன்றி திறக்க ஒரு மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.



VLC Media Player. கணினிக்கான மிகச்சிறந்த மீடியா பிளேயர் இது. இதற்கென நீங்கள் எந்த வீடியோ கோடக்குகளையும் தனியே நிறுவ வேண்டியதில்லை. எல்லாம் உள்ளடங்கியே வருகிறது. அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து விதமான வீடியோவையும் திறக்கிறது.

இது முற்றிலும் இலவசம். தற்சமயம் ஒரு வினாடிக்கு பதினேழுக்கும் மேற்பட்டோர் இதனை தரவிறக்குவதாக அவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள். இது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஓஎஸ் என்று பெரும்பாலான இயங்குதளங்களில் வேலை செய்யும். இந்த சுட்டிக்கு http://www.videolan.org/vlc/ சென்று உங்கள் கணினி இயங்குதளத்திற்கு ஏற்ற விஎல்சி மீடியா ப்ளேயரை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

ஞாயிறு, 21 மார்ச், 2010

உலக தண்ணீர் தினம் 22-03-2010

அன்பானவர்களே நாளை (22-03-2010) உலக தண்ணீர் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.இந் நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் சுத்தமான நீருக்காக மக்கள் இடர்பாடுகளை எதிர்கொண்டிருப்பதாகவும், நாடு முழுவதும் சுத்தமானநீர் கிடைக்காத காரணத்தால் சுமார் நாலரை கோடி மக்கள் பல வியாதிகளுக்கு ஆளாகியிருப்பதாகவும், இந்த சுகாதார கேடுகள் வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

> ஏற்பட்டிருக்கும் இந்த பஞ்சம் சுத்தமான நீர் கிடைக்காத பஞ்சத்தால் ஏற்படவில்லை. ஆனால் சரியான இடத்தில், சரியான நேரத்தில் போதிய தரமான நீர் கிடைக்காததாலும், நீர் ஆதாரங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ள தவறியாதாலுமே ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை விவரிக்கின்றது. இது தவிர பெருகி வரும் தொழிற்சாலைகளால் சுற்றுப்புற சூழல் மாசுபட்டுள்ளதும், நீர் ஆதாரங்களை பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டங்களை சரிவர நிறைவேற்றாததும் இந்த நிலைமைக்கு காரணமாகின்றது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது நீர் ஆதாரங்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான். ஒரு குடம் தண்ணீருக்காக நாள்தோறும் பல கிலோ மீட்டர்கள் நடந்து செல்லும் பல லட்சக்கணக்கான பெண்கள் இந்திய கிராமங்களில் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

நம் ஆட்சியாளைர்களிடம் (அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்) தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ஒரு நல்ல நீண்ட கால திட்டம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மேலும் தண்ணீர் பிரச்சினை தலை தூக்கும் பொழுதெல்லாம், அதை நிரந்தரமாக யாரும் தீர்ப்பதில்லை. உதாரணமாக, ஆற்று நீர் கிடைக்காத போது நாம் கிணறு தோண்டினோமே தவிர வேறு நிரந்திர வழி தேடவில்லை. கிணறுகள் வற்றியதும் ஆழ்துளை கிணறுகள் தோண்டினோமே தவிர வேறு நிரந்திர வழி தேடவில்லை. இன்று ஆழ்துளை கிணறுகளும் வற்றியதும் கடல் நீரை குடி நீராக மாற்றவும், நதிகளை இணைக்கவும் மட்டுமே சிந்திக்கிறோம். மரம் நட்டால் தான் மழை பொழியும் என்று நம் அரசு என்ன தான் கரடியாக கத்தினாலும் நாம் அதை கவனிக்காமல் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைத்து வாணத்தையே அன்னாந்து அல்லவா பார்க்கிறோம்.

ஒரு சமயம் தென் இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் வந்த பொழுது, நீர் நிலைகளை ஆராய்ச்சி செய்ய வெள்ளையர்கள் தமிழ் நாட்டிற்கு வந்தனர். அப்பொழுது இருந்த அந்த நீர் நிலைகளின் பின்னலை (Network) பார்த்து அதிசயித்தனர். அதாவது, ராமநாதபுரத்தில் ஒரு குளம் இருக்கும். மழைக் காலத்தில் அந்த குளம் நிரம்பியதும், அந்த குளத்தில் இருந்து வடியும் உபரி நீர், வழிந்து சென்று அடுத்த ஊரில் இருக்கும் குளத்தை நிறப்பும். இது அப்படியே அடுத்த ஊருக்கும் தொடரும். இந்த முறையால், தண்ணீர் பிரச்சினை தீர்வதுடன் அதிக மழை பொழியும் பொழுது வெள்ளத்தையும் தவிர்க்கும். ராமநாதபுர மாவட்டம், முன்பு செழிப்போடு தான் இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது? நாம் நம்முடைய குளாங்களை வனிக வளாகமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆற்றையும், குளத்தையும் தூர் வாரும் ஒப்பந்த்தில் ஊழல் புரிந்திருக்கிறோம்

இயற்கை ஒரு புதையல் தான். ஆனால், எடுக்க எடுக்க குறையும் அமுத சுரபி அல்ல. இயற்கைகும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லை நம்மால் தொட முடியாது. தொட முயன்றால் தோல்வி தான் கிடைக்கும். இயற்கை நமக்குக் கொடுக்கும் வளங்களை முடிந்த வரை சிக்கனமாக உபயோகிக்க பழக வேண்டும். இருப்பதை வைத்து மேலும் நம் வளங்களை பெருக்க வேண்டுமே தவிற, இருப்பதை உபயோகிக்க மட்டும் (அழிக்க) முயலக்கூடாது. இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரை சார்ந்து தான் வாழ முடியும், வாழ வேண்டும். ஒரு இனம் இன்னொரு இனத்தை அழித்தால் மற்றொரு இனமும் தானாக அழியும்.

இந்த பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு? இயற்கையிடம் இருந்து திருடுவதை விட்டு, நீர் நிலைகளைப் பெருக்கலாம். நீர் நிலைகளைப் பெருக்க நீரை சேமிப்பது மிக மிக அவசியம்.
இது மக்களுக்கான திட்டம். மக்களும் இந்த கொடுமையை நன்றாக உணர்ந்துள்ளனர். அதனால் அவர்களையும் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம். நிச்சயமாக மக்கள் உதவுவார்கள். குளங்களை வனிக வளாகங்களாக மாற்றுவதை விட்டு, அவற்றை தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும் (ஊழல் இன்றி). இந்த திட்டம் நிறைவேற, சத்தியமாக அரசியலை கலக்க கூடாது. அதனால், மக்களும் தன் பங்கிற்கு, வீடுகள் தோறும் மழை நீரை சேமித்து வைக்கலாம். மேலும் நீரை சேமிக்க பல வழிகள் உள்ளது.
காலையில் பல் துலக்கும் பொது பைப்ஐ அப்படியே திறந்து வைப்பதற்கு பதிலாக ஒரு மக் அல்லது வாளியில் பிடித்து வைத்துக்கொல்ளலாம், தண்ணீர் குடிக்கும்போது தேவையான அளவு மட்டும் பிடித்து குடிக்கலாம், குளித்த , பாத்திரம் கழுவிய தண்ணிரை செடிகளுக்கு பயன்படுத்தலாம் இப்படி சின்ன சின்ன முறைகளினால் கூட நிறைய தண்ணீர் மிச்சமாகும்.

ஒரு நல்ல நீண்ட கால திட்டத்தை உருவாக்கி அதை கண்டிப்புடன் செயல் படுத்த வேண்டும். இப்படி ஒரு திட்டம் வந்தால், அதற்கு மிகப் பெறிய எதிரியாக ஊழல் மட்டுமே இருக்க முடியும். இதை முறியடிக்க, இந்த திட்டத்தை சமூக அக்கறையுள்ள சில அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம். வரயிருக்கும் தலைமுறைகள் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்க இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கிறது. எனவே தண்ணிரை சேமிப்போம் எதிர் கால தலைமுறையை பாதுகாப்போம்.



நன்றி:இணையம்.

வியாழன், 18 மார்ச், 2010

ஐ.ஏ.ஸ், ஐ.பி.ஸ் இலவசமாக படிக்கலாம் வாருங்கள்...

"ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸஸ் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை http://www.saidaiduraisamysmanidhaneyam.com/ என்ற மனிதநேய அறக்கட்டளையின் இணையதளம் மூலம் இலவசமாகப் பெறலாம்" என்று அறக்கட்டளையின் தலைவர் சைதை சா. துரைசாமி கூறினார்.

மனிதநேய அறக்கட்டளை, சென்னை லியோ கிளப் ஆகியவற்றின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் கடந்த 10.03.2010 புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை சா. துரைசாமி கலந்து கொண்டு பேசும் போது, "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளை எழுத ஆர்வம் இருந்து, அதேவேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இளைஞர்களை, போட்டித் தேர்வுகளை எழுத ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

பத்தாம் வகுப்பில் 450 மார்க் எடுத்தும் பொருளாதாரப் பற்றாக் குறையால் மேற்கொண்டு படிக்க முடியாமல் கல்வி மறுக்கப் படுவது அநீதியாகும். ப்ளஸ்-1 ப்ளஸ்-2 முதல் பள்ளிக் கல்வியையும் ஐ.ஏ.எஸ், ஐ.ப்பீ.எஸ் பட்டங்களுக்கான பயிற்சிகளையும் இலவசமாக வழங்கும் மனிதநேய அறக்கட்டளையினரும் அதன் தலைவர் சைதை துரைசாமி அவர்களும் வாழ்த்துகளுக்கு உரியவர்கள்.

மனிதநேய அறக்கட்டளை ஆண்டுதோறும் 10ஆம் வகுப்புத் தேர்வில் 450 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவர்கள் 50 பேரை தத்தெடுத்து, அவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2, வகுப்புகளில் இலவசமாகப் படிப்பளித்து, அவர்களை ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் போன்ற தேர்வுகளுக்குத் தயார்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் 100 பேர் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இப்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கின்றனர்.

இணையதளத்தில் முதல்நிலைத் தேர்வுகளுக்குத் தேவையான புவியியல், அரசியல், அறிவியல், சமூகவியல், பொதுநிர்வாகம் ஆகிய பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஜெனரல் ஸ்டடிஸுக்குத் தேவையான புத்தகங்கள், தற்கால நிகழ்வுகள், பயிற்சி மையங்களின் வகுப்பறைகளில் ஆசிரியர் எடுக்கும் பாடங்கள், ஏற்கெனவே தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களின் பாடக்குறிப்புகள், வினா வங்கிகள் போன்றவையும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக் கொள்ளலாம்" என்று கூறினார்.

இணையத்தின் மூலம் கிடைக்கவிருக்கும் இப்பயிற்சி வகுப்புகளின் பாடங்கள், இலவசப் பயிற்சி வகுப்புகளில் நேரடியாகக் கலந்து கொண்டு பயன்பெற இயலாத கிராமீய மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.

நன்றி .:: இந்நேரம் வலைத்தளம் ::.

செவ்வாய், 16 மார்ச், 2010

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.

நன்றி:இணையம்.

சனி, 13 மார்ச், 2010

இந்தியர்களுக்கு இலவசமாக உணவளிப்பதர்காக ஒரு இணையதளம்

அன்பான சகோதரர்களே உலகில் பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 7000 அதிகம்

உலகத்தில் பசியால் வாடுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் வசிக்கின்றனர்

இந்தியாவில் ஒரு நிமிடத்தில் 5பேர் பசியால் இறக்கின்றனர்

எனவே உங்கள் உணவுகளை வீணாக்காதீர்கள் மேலும்

இந்தியர்களுக்கு இலவசமாக உணவளிப்பதர்காக ஒரு இணையதளம் செயல்பட்டு கொண்டுள்ளது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த தளத்திற்கு சென்று ஒரு க்ளிக் செய்தால் போதும் நீங்கள் ஒருவருக்கு உணவு கொடுத்தவர் ஆகிவிடுவீர்கள்















அந்த இணையதளத்தின் முகவரி

www.bhookh.com

தினமும் ஒருவருக்கு உணவளிக்க இந்த பக்கத்தை உங்களது முதல் பக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்

புதன், 10 மார்ச், 2010

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும் பகுதி - 3

அல்லாஹ்விடம் கேட்கும் துஆவின், இறை நினைவு கூர்தலின் (திக்ரின்) வரையறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அல்குர்ஆன் 7:55,205 திட்டமாகக் கூறுகின்றன. அவை வருமாறு:
(முஃமின்களே) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள், வரம்பு மீறுகிறவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை (7:55)
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்கப் பணிவோடும், அச்சத்தோடும் உரத்த சத்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவு கூறுவீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம் (7:205)
துஆவுக்குரிய அல்லாஹ்வின் நிபந்தனை: துஆ பணிவாகக் கேட்கப்பட வேண்டும். பணிவின்றி சப்தமாகக் கேட்பதே முதல் குற்றம்; வரம்பு மீறிய செயல். அல்லாஹ்வின் நேசத்தைப் பெற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து சென்ற நபிமார்களை இழுத்து இவர்கள் கேட்கும் துஆ நல்ல துஆவாக அல்லாஹ்வால் ஏற்கப்படுவதாக இருந்தால் நிச்சயமாக நபி(ஸல்) அதைக் கற்றுத் தந்திருப்பார்கள். மறைத்திருக்க மாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத இந்த துஆ சிறந்த துஆ என்றால், நபி(ஸல்) தனது தூதுத்துவப் பணியை முழுமையாக நிறைவேற்றவில்லை என நபி(ஸல்) மீது குற்றம் சுமத்துகிறார்கள். தனது கண்காணிப்பில் தூதர் இருந்தார் என்று அல்லாஹ் 52:48ல் கூறி இருந்தும் நபியை எச்சரித்து இவர்கள் ஓதும் இந்த துஆவை கற்றுக் கொடுக்கும்படி கட்டளையிடத் தவறிவிட்டான் என்று அல்லாஹ்வையும் குற்றப்படுத்துகிறார்கள். 42:21, 49:16 இறைவாக்குகள் சொல்வது போல் இவர்களை அல்லாஹ்வுக்கு இணையாளர்களாகி இவர்களாக இந்த துஆவை கற்பனை செய்து அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
எனவே இது தெளிவான பத்துஆ (கெட்ட பிரார்த்தனை) அல்லாமல் துஆ அல்ல.இதை நன்கு அறிந்த நிலையில் மவ்லவிகள்(?) நபி(ஸல்) கற்றுத் தந்த மிக சுருக்கமான மேலான துஆவை அனைவரும் எளிதாக ஓத முடியும் என்பதால், தங்களுக்குக் கை மடக்கு (கூலி) கிடைக்காது என்ற பயத்தினாலேயே மிக நீண்ட இந்த பித்அத் (கெட்ட) பத்துஆவை இறையச்சமின்றி அரங்கேற்றி வருகிறார்கள்.
இறை தியானத்திலும் அல்லாஹ்வின் 7:205 கட்டளையைப் புறக்கணித்து நிராகரித்து விட்டு (2:39) கூட்டாக கும்மாளமிட்டு, சப்தமிட்டுக் கூத்தடிப்பதை திக்ர், இருட்டு திக்ர் என மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மக்கள் பணத்தை ஹராமான வழியில் சாப்பிடுகிறார்கள். மக்கள் பணத்தை ஹராமான வழியில் கொள்ளை அடிக்கிறார்கள்

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும் பகுதி -2

4. நபி யூஸுஃப்-ஸுலைஹா போல் வாழ்க!
1. குர்ஆனிலோ ஹதீஸிலோ ஸுலைஹாவைப் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை. இந்த ஸுலைஹா யார்?
2. அறிமுகமே இல்லாதவரை மனைவியாக்க முன் வந்தது எப்படி?
3. குர்ஆனில் யூஸுஃப் நபியை அடிமையாக வளர்த்தவர் தான் பிற்காலத்தில் நபியின் மனைவியாக சித்தரிக்கப்படுகிறார். அது எப்படி?
அல்குர்ஆனே இவள் தவறு செய்து விட்டாள் என வர்ணிக்கிறது. தவறு செய்தவள், முன்னைய கணவனுக்குத் துரோகம் செய்தவள் நபியின் மனைவியாக முடியுமா?
4. இவளை நபியுடன் இணைத்து ஓர் காதற் காவியம் இயற்றியது அபாண்டமான பழியல்லவா?
5. திருமணம் நடந்ததாக ஆதாரமே இல்லாத ஒருவளை- ஒரு தம்பதியை குறிப்பிட்டு வாழ்த்தலாமா? இது முறையா?
பல தீமைகளைத் தொடர்ந்து செய்த ஒரு பெண்ணை ஒரு நல்லடியாருக்கு அதுவும் ஒரு நபிக்கு மனைவியாக்க வேண்டுமென்ற நிர்பந்தம் என்ன?
6. இன்னொருவரின் மனைவியை அதுவும் வயது முதிர்ந்த கிழவியை கன்னிப் பெண்ணாக உருமாற்றி திருமணம் செய்து வைக்க வேண்டுமென்ற அவசியம் என்ன?
7. அப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தால் அதை அல்லாஹ் குர்ஆனிலேயே அறிவித்திருப்பானே?
8. அஹ்ஸனுல் கஸஸ்-அழகிய வரலாறு என்று கூறி ஒரு அத்தியாயம் முழுவதிலும் யூசுஃப் நபியின் அற்புத வரலாற்றை சுவைபட பிறப்பு முதல் இறுதி வரை கூறிய இறைவன் இதை எவ்வாறு கூறாது விட்டிருப்பான்?
இவ்வளவு பிரச்சனைக்குரிய விசயத்தை கட்டாயமாக அதுவும் மகிழ்ச்சிகரமான மண விழாவில் புதுத் தம்பதியை வாழ்த்துவதற்காகக் கூறித்தான் ஆக வேண்டுமா? மார்க்க ஞானமுள்எவரும், மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள விரும்புபவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
இந்த துஆவை ஓதாமல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த “பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீகைர்’-அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக… (நபிவழி துஆ அபூஹு ரைரா(ரழி) அறிவிக்கும், இந்த ஹதீஸ் அஹ்மத், அபூ தாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
இந்த துஆவை மட்டும் ஓதினால் திருமணம் தடுக்கப்பட்டதாகி விடுமா? இல்லை பாவமான காரியமாகி விடுமா? இல்லை அல்லாஹ்வால் இந்த நிக்காஹ் புறக்கணிக்கப்பட்டு விடுமா?
(மவ்லவிகளை பதில் சொல்லுங்கள். இப்போதாவது உங்களுக்கு அச்சம் ஏற்படுகிறதா?)
ஒருபோதும் இல்லை என்பது அறிவு ஜீவிகளுக்கு நன்றாகவே புரியும். அப்படி இருந்தும் பல விதமான குழப்பங்கள் அடங்கிய-ஏன் குழப்பங்களே இல்லாமல் மிகவும் தெளிவாக (அல்லாஹ்வால் குர்ஆனிலே அவர்களைப் பற்றி சொல்லப்பட்டு) தவறு என்று விளங்கக் கூடிய இந்த பாவமான சாபக்கேட்டை நாமாகவே கேட்டுப் பெற்றுக் கொள்வதா?
அறிவு ஜீவிகள் புகுந்து பிரித்து அறியக்கூடிய ஜீவிகள் கேட்கிறார்கள். பல ஆண்டு காலமாக யாரும் இந்த துஆக்களை கேட்கவில்லையா? அவர்கள் எல்லோரும் நாசமாகி வாழ்க்கையில் சந்தோசமே இல்லாமல் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கி றார்களா? அவர்கள் ஒன்று சேர்ந்து வாழாமல் தான் போய்விட்டார்களா? அல்லது குழந்தை பாக்கியம் தான் இல்லாமல் போய்விட்டதா என்று? இது ஷைத்தான் அழகாகக் காட்டும் கேள்வியாகும். உங்களுக்கு நன்றாகவே தெரியும் கேட்கின்ற துஆக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று; அதே வேளை சிலபேரின் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படவும் செய்கிறது என்று. இங்குதான் நீங்கள் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும். நீங்கள் கேட்கக் கூடிய அந்த (சாபக் கேடான) பத்துஆவை சில நேரம் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும், மறுக்கவும் செய்கிறான்.
அப்படி இருக்க சாபக்கேடான இந்த துஆவால் நாசமானவர்களும் இருக்கலாம், மேலும் அல்லாஹ்வால் இந்த (சாபக்கேடு) பத்துஆ புறக்கணிக்கப்பட்டு நன்றாக இருப்பவர்களும் இருக்கலாம். இந்த சாபக்கேட்டை நாமாகவே கேட்டு பெற்றுக் கொள்வதை விட்டுவிட்டு இனிமேலாவது அல்லாஹ்வும் ரசூலும் கற்றுத்தந்த வழியில் துஆக்களை கேட்டு நன்மையைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்களேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.

இந்திய - அமெரிக்க அணுசக்தி திட்டம் ஒரு ஆய்வு

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?

இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?

நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

திங்கள், 8 மார்ச், 2010

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும் பகுதி-1

திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் “”நபிமார்களைப் போல் வாழ்க” என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன் கூறி வருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையே மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர். ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வ பாரிஸா வ இப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வ ஸுலைஹா …” இவர்களைப் போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள்.

1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க!
1. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

2. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக் கனியை உண்டத ற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
3.அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப் பட்டார்கள்.
4.பின்னர் கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள்.
இந்த மணமக்களும் துன்பத்திற்கும், இறைக் கோபத்திற்கும் ஆளாகி பிரிந்து வாழ வேண்டுமா?

2.நபி நூஹும் ஃபாரிஸாவும் போல் வாழ்க!
நூஹு(அலை), லூத்(அலை) ஆகிய இருவருடைய மனைவியரும் நமது இரு நல்லடியார்ககளின் மனைவிகளாக இருந்தனர். அவர்களிருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே (அந்த இறைத் தூதர்களால்) அவ்விருவரையும் இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இருவரும் நரகிற்குச் செல்வோருடன் சேர்ந்து நுழையுங்கள் என்று கூறப்பட்டது. (66:10)
இவ்வசனத்தின் மூலம் நூஹ் நபி, லூத் நபி இருவரின் மனைவியர் இருவருமே நரகவாசிகள் என மிகத் தெளிவாகவே குர்ஆன் அறிவித்து விட்டது. இவ்வசனத்தில் இரு நபிமார்களின் இரு மனைவியரும் இறை மறுப்பாளர்களாக இருந்து தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்து நரக வாசியாகவும் ஆகிவிட்டதை இறைவன் உலகோருக்குப் பிரகடனப்படுத்துகிறான். இதைத் தெரிந்தும் நரகவாசியான மனைவியோடு வாழ்வது போல் வாழ்க என வாழ்த்தலாமா?

3. நபி இப்றாஹீம், ஸாரா போல் வாழ்க!
இப்றாஹீம் நபி-ஸாரா தம்பதியருக்கு நீண்ட நெடுங்காலமாகவே (முதுமை வரை) குழந்தைப் பேறே இல்லாதிருந்தது.
எனது கேடே! மாதவிடாய் நின்று நான் கிழவியாகவும் எனது கணவர் வயோதிகராகவும் இருக்க நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா?
நிச்சயமாக இது ஆச்சரியமான விசயம் என்று அவரது மனைவி கூறினார் என அல்குர்ஆன் 11:71,72 கூறுகிறது.
வயது முதிர்ந்து கிழப்பருவம் வரும் வரை குழந்தைப்பேறே இல்லாதிருந்ததைத்தெரிந்தும் இவ்வாறு வாழ்த்தலாமா? எந்தத் தம்பதியர் வயது முதிரும்வரை குழந்தைப் பேறில்லாதிருப்பதை விரும்புவர்? ஆசையோடு எதிர்பார்க்கும் புதுமணத் தம்பதியரை இப்படி வாழ்த்தலாமா?

தொடரும்....

குஜராத்திலிருந்து முஸ்லிம்களை துடைத்தெறிய முயலும் மோடி!

குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடியை பயங்கரவாத முதலமைச்சர் என்றே அழைக்கின்றனர். இவர் தலைமையில் அரசு அமைந்த நாள் முதல், குஜராத்தில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கெல்லாம் வசித்து வருகிறார்கள் என்ற கணக்கெடுப்பை எடுத்து வருகிறார். இதற்கு முன்னர் 1999 ல் இவரது கணக்கெடுப்பை உயர்நீதி மன்றம் தடுத்து நிறுத்தியது. சட்டத்தை மீறுவது என்பது இந்துத்துவவாதிகளுக்கு வழமையான விடயம் என்பதால் இப்போது மீண்டும் துவங்கி விட்டார்.

இப்போது, முஸ்லிம்கள் எப்படி வாழ்கிறார்கள்? எங்கெல்லாம் பரவி வாழ்கிறார்கள் என்று கண்டறிய ஒரு விசாரணை கமிஷன் அமைத்து இருக்கிறார். இதேப் போல் மற்றொரு சிறுபான்மையினமாகிய கிறிஸ்தவர்களின் கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. இதனை 1949 ம் ஆண்டிலிருந்து துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்புகளின் நோக்கம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இல்லாத குஜராத்தை உருவாக்குவதே. மேலும் முஸ்லிம்களின் பொருளாதர நிலை குறித்து ஆய்வு செய்யவும் மோடி பணித்துள்ளார். நிலத்தை வாங்கி விற்பவர்களின் கூட்டமைப்பு கூட, முஸ்லிம்களுக்கு நிலத்தை விற்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இதுபோல அரசியல் சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லாமல் போனது ஏன்? என்று தெரியவில்லை. குஜராத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்களையும் கணக்கெடுக்கவும் மோடி அரசு தவறவில்லை.

இதற்காக மோடி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சேத்னா என்பவரை நியமித்துள்ளார். இந்த சேத்னா, 2004 ல் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை தீ வைத்து கொளுத்திய 21 பேரை ஒட்டு மொத்தமாக விடுதலை செய்தவர்.

குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜோஹ்புராவில் எந்த அடிப்படை வசதியும் செய்திடாமல் வதைத்து வருகிறார் மோடி. இந்துத்துவா சிந்தனையின் சோதனைக் களம் என்று வருணிக்கப்படும் காந்தி மண் காவிப் புழுதியால் மறைக்கப்பட்டு வருகிறது. குஜராத் முஸ்லிம்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் சூழ்நிலையில், தங்கள் இசுலாமிய அடையாளங்களை மறைத்து இந்து பெயர்களுடன் ஜீவித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். மேலும் சங் பரிவார்கள் ஊடகங்களில், குஜராத் சிறந்த நிர்வாகியால் ஆளப்படுவதாக பீலா விடுகின்றனர். ஆனால் உண்மை நிலை அதுவல்ல.

நன்றி :தி சண்டே இண்டியன்

சனி, 6 மார்ச், 2010

கல்லூரி சான்றிதழ் தவறவிட்டால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

கல்லூரியில் படித்து முடித்தவர்கள் தங்களுடைய மாற்று சான்றிதழை (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்) தொலைத்துவிட்டாலோ, அல்லது இயற்கை சீற்றங்களின்போது அழிந்துவிட்டாலோ, மாற்று சான்றிதழ் பெறுவது எப்படி? என்று பார்ப்போம்.
மாற்று சான்றிதழ் வழங்கும் அதிகாரியாக கல்லூரி முதல்வரே செயல்படுகிறார்.
மாற்று சான்றிதழ் தொலைந்துவிட்டால் அது பற்றி அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். பின்னர் சான்றிதழ் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதற்கு காவல் அதிகாரி ஒரு சான்றிதழ் வழங்குவார். அந்த சான்றிதழை பெற்ற பின் மாற்று சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் (தாசில்தார்)மனு மூலம் தெரிவிக்க வேண்டும். தாசில்தார் அந்த பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்துவிட்டது உண்மை என சான்று அளிப்பார்.

பின்னர் காவல் நிலையம் கொடுத்த சான்றிதழ், தாசில்தார் வழங்கிய சான்றிதழ் ஆகியவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணம் ஆகியவற்றுடன் கல்லூரி முதல்வருக்கு மாற்று சான்றிதழ் நகல் கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மாற்று சான்றிதழ் வழங்குவார்.

கல்லூரி மதிப்பெண் சான்றிதழை தவறவிட்டால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?
கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்பெண் சான்றிதழை தொலைத்துவிட்டால் கடைசியாக படித்த கல்லூரி முதல்வருக்கு மதிப்பெண் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் அந்த மதிப்பெண் சான்றிதழ் நம்பர், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றை சரிபார்த்து அவர் வழியாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு பரிந்துரை எழுதுவார். அத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம், வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்குவார்.

மனிதநேய மக்கள் கட்சியின் மதுக்கடை மறியல் போர்

மனிதநேய மக்கள் கட்சி மதுக்கூர் நகரம் சார்பாக மதுக்கடை மறியல் போர் இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10.00 மணிக்கு மதுக்கூர் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்குகிறது...



பொது மக்கள் அனைவரும் கலைந்து கொள்ளவும்....