வியாழன், 19 ஆகஸ்ட், 2010

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

நோன்பின் மாண்புகளை சிறப்புகளை குறித்து நபி (ஸல்) அவர்க்ள கூறிய ஆதாரபூர்வமான அநேக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களை மக்கள் தெரிந்து அமல்கள் செய்வதை விட ஆதாரமற்ற செய்திகளை வைத்து அமல்கள் புரிவதில் தான் ரமழானின் காலத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள்.

பின்வரும் செய்திகள் ரமழான் காலத்தில் அதிகமதிகமாக பள்ளிவாசல்களில் பயான் செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் பலஹீனமான செய்திகளே தவிர பலமான செய்திகள் அல்ல என்பதற்காகவே மக்களின் பார்வைக்கு தருகிறோம்.
  • - யா அல்லாஹ் ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எமக்கு அருள்புரிவாயாக! ரமழானை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை தருவாயாக என நபியவர்கள் கூறினார்கள். (நூல்: பஸ்ஸார். தபரானி)
    இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் ஸாயித் பின் அபீ ருகாத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரி (ரஹ்) அவர்களும் இவர் பலஹீனமானவர் என்று இமாம் நஸயீ (ரஹ்), இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களும் கூறுகிறார்கள்.


  1. - ரமழானின் ஆரம்ப (பத்து நோன்புகளு)ம் ரஹ்மத்தாகவும் அதன் நடுப்பகுதி (பத்து நோன்புகளும்) மஃபிரத்தாகவும் அதன் இறுதி பகுதி (கடைசிப் பத்து) நரக விடுதலையாகவும் உள்ளது நபியவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னு குஸைமா)


  2. இதன் அறிவிப்பாளர் தொடரில் அலி இப்னு ஸைத் இப்னு ஜுத்ஆன் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர். மேலும் இந்த செய்தியை பதிவு செய்த இமாம் இப்னு குஸைமா (ரஹ்) அவர்கள் இது பலவீனமானது என்பதை குறிக்க ‘இது உறுதியானதாக இருந்தால்’ என்ற வார்த்தையில் குறிப்பிடுகிறார்கள். பலஹீனமான ஹதீஸை அடையாளம் காட்டுவதற்கு இமாம்கள் கையாளும் முறை இது.


  3. ரமழானில் உள்ள சிறப்புகளை அறிந்தால் வருடம் பூராவும் ரமழானாக இருக்க வேண்டும் என எனது உம்மத்தவர்கள் ஆசைகொள்வார்கள் என நபியவர் கள் கூறினார்கள். (நூல்: அபூயஃலா)
    இதன் அறிவிப்பாளர் தொடரில் ஜரீர் இப்னு அய்யூப் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர். மேலும், இது பலஹீனமானது என்பதை இமாம் இப்னு குஸைமா (ரஹ்) மேல் கூறியவாறு சுட்டிக் காட்டுகிறார்கள்.


  4. - நோன்பாளியின் தூக்கம் இபாதத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் அல் ஜாமிஉஸ் ஸகீரில் (9293) குறிப்பிடுகிறார்கள். இதில் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்பா என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர் என்று இமாம் ஸைனுத் தீன் அல் ஈராகி (ரஹ்) இமாம் பைஹகி (ரஹ்) இமாம் சுயூத்தி (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல்பிர்தவ்ஸ் 4/248) (இந்தச் செய்தியை வைத்தே சிலர் பகல் முழுவதும் தூக்கத்தில் காலத்தை கழிக்கிறார்கள்)


  5. எவர் ரமழானில் இஷா தொழுகையை ஜமாஅத்தோடு தொழுகிறாரோ அவர் லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொண்டவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் இஸ்பஹானி). இது முர்ஸல் எனும் பலஹீனமான செய்தியாகும். இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்களின் கூற்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு குஸைமாவில் வரும் இச்செய்தியில் உக்பத் இப்னு அபீல் ஹஸ்னா என்பவர் இடம்பெறுகிறார். இவர் யார் என அறியப்படாதவர். பலஹீனமானவர் (மஜ் ஊல்) என இமாம் இப்னு முதீனி (ரஹ்) கூறுகிறார்


  6. நோன்பு பொறுமையின் பாதியாகும் என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: திர்மிதி, இப்னுமாஜா).
    இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் மூஸா இப்னு உபைதா என்பவர் பலஹீனமானவர் என அஷ் ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) குறிப்பிடுகிறார்.


  7. நோன்பு திறக்கும்போது ஓதும் துஆ: அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வலாரிஸ்திக அப்தர்து’ என்று வரும் ஹதீஸ் அபூதாவூத் (2358) மற்றும் இப்னு ஸுன்னு பிஅமலில் யவ்மி வல்லைலா (481) எனும் நூலில் பதிவாகியுள்ளது.
    இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் மலிக் பின் ஹாரூன் பின் அன்தரா என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர் என்று இமாம் அஹ்மத் (ரஹ்) தாரகுத்னி (ரஹ்) இமாம் அபூ ஹாதம் (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.
    இது உறுதியான செய்தியல்ல என இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) குறிப்பிடு கிறார்கள். (நூல்: ஸாதுல் மஆத் (2÷54)

Thanks.

- உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக